Tuesday, April 13, 2010

புதினா துவையல்

தேவையானப் பொருட்கள்

  • புதினா - ஒரு கட்டு
  • தேங்காய் - அரை மூடி
  • மிளகாய் வற்றல் - 12
  • புளி - சிறு நெல்லிக்காய் அளவு
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
புதினா இலைகளை ஆய்ந்து கொண்டு தண்ணீரில் அலசிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு 30 நொடி சிவக்க வறுக்கவும்.
 
பருப்பு சிவந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாய் வற்றல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்
ஒரு நிமிடம் கழித்து அலசி வைத்திருக்கும் புதினாவை போட்டு 2 நிமிடம் வதக்கவும். புதினா இலை லேசாக நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து எடுத்து ஆற விடவும்
 
வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு மிக்ஸியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். அதன் பின்னர் அரைத்த துவையலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் தாளித்த பொருட்களை கொட்டி கலந்துக் கொள்ளவும். 

இந்த துவையலை சாதத்துடன் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கு கூட சேர்த்து சாப்பிடலாம்.

 
 
 

No comments:

Post a Comment